பனாமா பேப்பர்ஸ் லீக் விவகாரம்: சத்தீஸ்கர் பாஜ அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி: பனாமா பேப்பர்சில் சத்தீஸ்கர் முதல்வர் பெயர் லீக் ஆனதை தொடர்ந்து அகஸ்டா ஹெலிகாப்டர் வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, சத்தீஸ்கர் மாநில பாஜ அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில அரசு, 2007ல், முக்கிய பிரமுகர்களுக்காக அகஸ்டா ஹெலிகாப்டரை வாங்கியது. இந்நிலையில், ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அம்பலமான மோசடியில், ராமன் சிங்கின் மகன், அபிஷேக் சிங் பெயர் அடிபட்டது.
ஹெலிகாப்டர் பேரத்தில் மோசடி செய்து கிடைத்த பணத்தை, வெளிநாட்டில் போலி நிறுவனத்தில், அவர் முதலீடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையே, இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ. கே. கோயல், யு. யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஹெலிகாப்டரை வாங்கியதற்கு காரணம் என்ன; இதற்கு டெண்டர் விட வேண்டும் என்று தலைமைச் செயலர் குறிப்பிட்டும், அவரது ஆலோசனை ஏன் ஏற்கப்படவில்லை.
இந்த ஹெலிகாப்டர் வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சத்தீஸ்கர் அரசு வரும், 23ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
.