ஈரான்-ஈராக் எல்லையில் பூகம்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈரான்ஈராக் எல்லையில் பூகம்பம்

கெர்மன்ஷா: ஈரான், ஈராக் எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 150 பேர் பலியானார்கள்.

ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி. மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவுகோலில் 7. 3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் கடுமையாக குலுங்கின.   பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.

கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நில நடுக்கத்தினால் இரு நாடுகளிலும் சுமார் 135 பேர் இறந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கெர்மன்ஷா மாகாணத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. ஈராக்கில் 4 பேர் பலியானதாகவும், 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குர்திஷ் சுகாதாரத்றை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முழுவீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கோஸ்டா ரிக்காவிலும் நிலநடுக்கம்
ஈரான், ஈராக்கினை தொடர்ந்து மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டா ரிக்கா நாட்டிலும் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6. 5 புள்ளிகளாக இது பதிவானது.

தலைநகர் சான்ஜோசிலிருந்து தென்மேற்கே 69 கிலோ மீட்டர் தொலைவில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

உயிரிழப்பு குறித்தும் உடனடியாக தகவல் இல்லை.

.

மூலக்கதை