மெக்சிகோவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரணி: மறுவாழ்வுக்கு உதவ கோரிக்கை
மெக்சிகோ: கடந்த மாதம் பூகம்பம் தாக்கிய மெக்சிகோவில் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகள் கட்டவும், மறுவாழ்வுக்கு அரசு உதவக்கோரியும் பேரணியாக சென்றனர். மெக்சிகோ நகரின் மிக முக்கிய சதுக்கமான ஜோலோஹாவில் திரண்டு பேரணி சென்ற அவர்கள், நிர்க்கதியாக நிற்கும் தங்களின் எதிர்காலம் அரசை நம்பியிருப்பதாக கூறியுள்ளனர். அரசால் மீண்டும் கட்டித்தரப்படும் வீடுகள் பாதுகாப்புடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி மெக்சிகோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 369 பேர் உயிரிழந்தனர். இந்த துயரத்தின் வடு இன்னும் நீங்கா நிலையில் மறுவாழ்வு கோரி மக்கள் தெருவில் பேரணி நடத்தி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.