இமாச்சலப் பிரதேசத்தில் பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா நகரில், ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்த விழுந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்தபோது அதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள் எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்தனர். மேலும் மினி டிரக் மற்றும் கார் ஆகியவை பாலத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரும் பண்டிட் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்து பேசிய ஆட்சியர் சுதேஷ் குமார், பாலம் இடிந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் கூறியுள்ளார். கட்டுமான முறையில் உள்ள கோளாறு அல்லது தரம் குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தியது பாலம் இடிந்தததற்கு காரணமாக இருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுதேஷ் குமார் மோஹ்தா கூறியுள்ளார்.