பெரும்பான்மை வாக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம்!! புதிய அதிகாரங்கள்!!
அரசாங்கம் பல நாட்களாக விவாதித்துக் கொண்டிருந்த புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் ( loi antiterroriste) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு உள்ளாகிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த இந்தச் சட்டம், இன்று பெரும்பான்மையாக 244 செனட்டர்களினால் வாக்களிக்கப்பட்டு, நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டமானது, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முடிவிற்கு வரும் அவசரகாலத் தடைச்சட்டத்தினைத் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்.
இன்றைய வாக்கெடுப்பில் 244 செனட்டர்கள் ஆதரவாகவும், 22 செனட்டர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். கொம்யூனிஸ்ட் கட்சியினர் எதிராக வாக்களித்த நிலையில், சோசலிசக் கட்சியினர் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.
இந்தச் சட்டத்தின் மூலம், உள்துறை அமைச்சகம், மற்றும் காவற்துறைத் தலைமையகங்களிற்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடாத்தவும், ஆபத்திற்குரிய மதத் தலங்களை மூடவும், எல்லைகளில் அடையாள அட்டைப் பரிசோதனை நடத்தவும், எனப் பாரிய அதிகாரங்கள் காவற்துறையினர்க்கும் பங்கரவாதத் தடைப்பிரிவினர்க்கும், இந்தப் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவசரகாலத் தடைச்சட்டத்தில் கொண்டு வரப்பட்ட பல அதிகாரங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.