பயணிகளின் உடமையை திருடியவனை: வீடியோ மூலம் அம்பலப்படுத்திய மணிப்பூர் முதல்வர்

தினமலர்  தினமலர்
பயணிகளின் உடமையை திருடியவனை: வீடியோ மூலம் அம்பலப்படுத்திய மணிப்பூர் முதல்வர்

புதுடில்லி: தாய்லாந்து விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை விமான நிலைய ஊழியர் திருடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மணிப்பூர் முதல்வர் பிரையின் சிங் கடந்த 15ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் 3 வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்களில் ஏர்போர்ட்டில் பயணிகளின் உடமைகளை ஏற்றும் 27 வயது மதிக்கதக்க ஊழியர் ஒருவர் பயணி ஒருவரின் சூட்கேஸை திறந்து அதில் இருந்த பொருளை திருடுவது பதிவாகியிருந்தது.

இந்த தாய்லாந்து நாட்டில் உள்ள பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் ஜெட் ஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணிகளின் உடமைகளை ஏற்றும் போது பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் பிரையின் சிங் பயணிகளின் உடமை விமான பயணத்தின் போது பாதுகாப்பானதாக இருக்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து. திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய பொருட்கள் உரிய பயணியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து ஜெட் ஸ்டார் நிறுவனம் தெரிவிக்கையில் : '' பயணிகளின் உடமை திருடப்படும் வீடியோவை நாங்கள் கவனத்தில் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். வரும்காலத்தில் இச்சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் '' என கூறினார்.

மூலக்கதை