இந்திய மாணவர்களுக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு ₹162 கோடி நன்கொடை: பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் வழங்கினார்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: இங்கிலாந்தில் வாழும் பிரபல இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். 67 வயதான இவர் உலகின் மிகப்பெரிய இரும்பு ஆலையை நடத்தி வருகிறார். இங்கிலாந்தில் வசித்தாலும், இந்தியா மீதான தனது பிடிப்பை விடாதவர். இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெற்கு ஆசிய மக்களுக்காக விரிவாக்கம் செய்ய உள்ளது. இதில் இந்தியா, ஆப்கன், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த பல்கலைக்கழக விரிவாக்கத்திற்கு மிட்டல் அறக்கட்டளை சார்பில் ₹162 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் இந்த பிரிவு லட்சுமி மிட்டல் தெற்கு ஆசிய நிறுவனம் என்று அழைக்கப்படும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஹார்வர்டு பல்கலைக்கழக தலைவர் ட்ரூ பாய்ஸ்ட் கூறுகையில்,” தெற்காசிய நிறுவனம் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகமும், உலகமும் இணைய உள்ளது. புதிய சேவைக்கு இது வழிவகுக்கும். மிட்டல் குடும்பத்தினர் செய்த இந்த நிதிஉதவி மூலம் அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்” என்றார். மிட்டல் கூறுகையில்,” இந்தியாவும், அதன் அண்டைநாடுகளும் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் முக்கியம். ஹார்வர்டு உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனம். பேசுவது மற்றும் சிந்திப்பதில் இந்த பல்கலைக்கழகம் முன்னேற்றத்தை அளிக்கக்கூடியது” என்றார்.

மூலக்கதை