ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி. 20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு பதிலடியாக கவுகாத்தியில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
2 போட்டிகள் முடிவில் 1-1 என சமநிலை வகிக்க 3வது மற்றும் கடைசி டி. 20 போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவுகாத்தியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.

கேப்டன் கோஹ்லி டி. 20போட்டியில் முதன் முறையாக டக் அவுட் ஆனார். ரோகித், தவான், டோனி, மணிஷ்பாண்டே என முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இதனால் கூடுதல் கவனத்துடன் இன்று களம் இறங்க வேண்டி உள்ளது. மணிஷ் பாண்டேவுக்கு பதில் இன்று லோகேஷ் ராகுல், சஹாலுக்கு பதில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.



மறுபுறம் ஆஸ்திரேலியா அணி உற்சாகத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 7 டி. 20 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில், கவுகாத்தியில் வெற்றி வெற்றது தான் அதற்கு காரணம்.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பேரென்டோர்ப், 4 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர்களை மிரள செய்தார். ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் டி. 20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

மழை மிரட்டல்   ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.



முதல் டி. 20 போட்டி இந்த மைதானத்தில் இதற்கு முன் சர்வதேச டி. 20 போட்டி நடந்ததில்லை. இன்று தான் முதல் போட்டி நடக்கிறது.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் நடந்துள்ளன. கவுகாத்தி மைதானம் போன்று இங்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை