வட கொரியாவிற்கு பொருள்களை சப்ளை செய்த 4 கப்பல்களுக்கு ஐ.நா.தடை
ஜெனிவா: எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியாவிற்கு ஐநா சபை பொருளாதார தடை விதித்திருந்தது. இதையடுத்து சரக்கு கப்பல்கள் வடகொரியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்ததால் 4 சரக்கு கப்பல்களை சர்வதேச துறை முகங்களுக்கு செல்ல ஐ. நா சபை தடை விதித்துள்ளது .
உலக அளவில் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்ய தடை இருத்தும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது.
இதனால் பல்வேறு நாடுகளின் பகையை வடகொரியா சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், நிலக்கரி, கடல்சார் உணவுகள், இரும்பு தாதுக்களை வடகொரியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய ஐநா தடை விதித்தது.
இந்த தடையை அடுத்து மேலும் ஒரு அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதனால் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் நேரடியாகவே பகைமை உண்டானது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தலைமையில் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மேலும் விரிவு படுத்தி துணிகள் ஏற்றுமதி மற்றும் எண்ணெய் இறக்குமதியில் தடை செய்து வடகொரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மீறி செயல்பட்ட பெட்ரெல் 8, ஹாவோ பன் 6, டோங் சான் 2, ஜி சுன் மரைன் ஆகிய சரக்கு கப்பல்கள் வடகொரியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்தன.
பெட்ரல் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமோராஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாவோ பன் 6 கப்பல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டிலும் டாங் சான் -2 கப்பல் வடகொரியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஜி சுன் என்ற கப்பல் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை. 4 கப்பல்களும் உலகின் வேறு எந்த துறைமுகத்திற்கும் செல்ல அனுமதி இல்லை.
இது குறித்து ஐநா குழுவின் தலைவர் ஹக் கிரிப்பன்ஸ் கூறுகையில், தடை செய்யப்பட்ட பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ததால், மேற்கண்ட கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல்கள் பயணம் செய்ய எந்த தடையும் இல்லை. துறைமுகத்திற்கு செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களுக்கு இத்தகைய தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என ஹக் கிரிப்பன்ஸ் தெரிவித்தார்.
.