8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

PARIS TAMIL  PARIS TAMIL
8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

கவுகாத்தியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாதவ் 27 ரன்களும், பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெரேன்டர்ஃப் நான்கு விக்கெட்டுக்களும், சம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
அடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரொன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பிஞ்சும் 8 ரன்களில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
அதன்பின்னர் மோய்சஸ் ஹெண்ரிக்ஸ் - டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலிய அணியின் மோய்சஸ் ஹெண்ரிக்ஸ் 62 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நான்கு விக்கெட் வீழ்த்திய ஜேசன் பெரேன்டர்ஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த டி-20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, 13-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 

மூலக்கதை