ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக வருமான வரித்துறைகமிஷனர் மீது சிபிஐ வழக்கு
சென்னை : சென்னையில் உள்ள வருமான வரித்துணை கமிஷனர் ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து குவித்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மேல்முறையீட்டு பிரிவில் கமிஷனராக இருப்பவர் விஜயலட்சுமி. இவரது கணவர் சுரேஷ்.
இவர், ரயில்வேயில் அதிகாரியாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம்.
பிரகாசம் மாவட்டம் மார்க்புரம் கோ-ஆப்ரேட்டிவ் காலனி. அதில் சுரேஷ், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இவர், 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார்.
இவர்கள் 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை உள்ள காலங்களில் சுமார் ஒரு கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு புகார்கள் வந்தன. எஸ்பி துரைக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளதால், விஜயலட்சுமி, சுரேஷ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கான முதல் தகவல் அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
.