நானும் காதலித்திருக்கிறேன்: சினிமா விழாவில் மாரியப்பன் கலகலப்பு

தினமலர்  தினமலர்
நானும் காதலித்திருக்கிறேன்: சினிமா விழாவில் மாரியப்பன் கலகலப்பு

பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாரியப்பன். சமீபத்தில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குறைந்த வயதில் பத்மஸ்ரீ பெற்றதும் அவர் தான். மாரியப்பன் நேற்று நடந்த திரு.வி.க பூங்கா என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். செந்தில் என்பவர் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றிய படம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாரியப்பன் பேசிதாவது:

தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான செந்தில் என்னை சந்தித்து முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்' என்றார். எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது. 2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது. அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை.

கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

'திரு. வி.க. பூங்கா' படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.

மூலக்கதை