பாகுபலியைப்போல் குருஷேத்ரா
தமிழில் காணாமல் போன பல நடிகைகள் கன்னடத்தில் பிசியாக இருக்கிறார்கள். சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இதில் அடக்கம். இவர்களில் சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் ஒரு கன்னடப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தர்ஷன். 'சேலஞ்சிங் ஸ்டார்' என கன்னட ரசிகர்களால் அழைக்கப்படும் தர்ஷனின் 50 ஆவது படமாக 'குருஷேத்ரா' என்ற படம் உருவாகி வருகிறது. மகாபாரத கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், கன்னட திரையுலகிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறதாம்.
துரியோதனனாக தர்ஷன் நடிக்கும் இந்தப்படத்தில் கர்ணனாக நடிக்கிறார் அர்ஜுன். இவர்களோடு பீஷ்மராக அம்பரீஷும் நடிக்கிறார். ஏற்கெனவே, இப்படத்தில் சினேகா, ரெஜினா கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்போது ரம்யா நம்பீசனும் இவர்களோடு இணைந்திருக்கிறார்.
தெலுங்கில் பாகுபலி படத்தைப்பற்றி வியப்புடன் பேசியதைப்போல் கன்னடத்தில் 'குருஷேத்ரா' பற்றி பேசுகிறார்கள்.