கூட்டாட்சியைக் கொடுத்து விடுவாரா மகாநாயக்கர்? – கேட்கிறார் ஐதேக எம்.பி
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கூட்டாட்சித் தீர்வைக் கேட்டாலும் அந்தத் தீர்வைத் தேரர்களால் வழங்க முடியுமா என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டவரைவு தொடர்பில் எதுவும் அறியாமல் பேசுகின்றனர் மகிந்த அணியினர். அந்தச் சட்டவரைவுக்கும் படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த காலத்தில் போரில் ஈடுபட்ட எந்தவொரு படையினரும் இதனால் பாதிக்கப்பட்டமாட்டார்கள். அவர்களுடன் இது எந்த வகையிலும் தொடர்பு படாது.
படையினர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாடுகளால் கைது செய்யப்படுவர் என்று கூறப்படுவதும் பொய்யாகும். எதுவும் நடக்காது. படையினரை இவர்கள் திட்டமிட்டு பயமுறுத்துகின்றனர். சிங்கள மக்களுக்கு மத்தியில் வீண் பீதியைக் கிளப்பிவிடுகின்றனர். இனி இடம்பெறப் போகும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதலையே அது தடுக்கும். இந்தச் சட்டவரைவை நாம் பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தம் காரணமாகக் கொண்டுவரவில்லை. அவ்வாறு நாம் அழுத்தங்களுக்கு அடி பணியமாட்டோம்.
மகிந்த அணியினர் எல்லா விடயங்களையும் அரசியலாக்குகின்றனர். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரரைச் சந்தித்ததையும் அரசியலாக்கி அதையும் அரசுடன் தொடர்புபடுத்துகின்றனர். விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கூட்டாட்சித் தீர்வைக் கேட்டதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படிக் கேட்டாலும் அந்தத் தீர்வைத் தேரர்களால் வழங்க முடியுமா? என்றார்.