தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 20 சதவீதம் வீழ்ச்சி
இந்த மாதத்துடன் நிறைவடையும், சர்க்கரை உற்பத்தி ஆண்டில், கடும் வறட்சி காரணமாக, கடந்த ஆண்டை விட, உற்பத்தி, 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என, தெரிகிறது.
தமிழகத்தில் நிலவிய வறட்சி காரணமாக, கரும்பு பயிரிடும் பரப்பளவு, 2016 அக்., – 2017 செப்., வரையிலான, சர்க்கரை ஆண்டில், வெகுவாக குறைந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு, சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடையும் என தெரிகிறது.
இது குறித்து, தமிழக தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன், ஒன்பது லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி, தற்போது, ஐந்து லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. பல மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. சர்க்கரை ஆண்டை பொறுத்தவரை, அது, அக்., 1 –செப்., 30 வரை கணக்கிடப்படுகிறது. 30ம் தேதியுடன், இந்த சர்க்கரை ஆண்டு முடிகிறது. இந்த ஓராண்டில், 155.86 லட்சம் டன் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்கு சென்றுள்ளது.
அதனால், 11.36 லட்சம் டன், சர்க்கரை தான் கிடைக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி, 2.2 டன் வீழ்ச்சி அடையும்.பல இடங்களில் வறட்சி காரணமாக, இம்முறை, கரும்பு சாகுபடிக்கான முயற்சி கைவிடப்பட்டது. அதனால், வரும் ஆண்டில், சர்க்கரை உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –