‘திறமையான தலைமையின் கீழ் டாடா குழுமம்’: ரத்தன் டாடா பெருமிதம்
புதுடில்லி : ‘‘டாடா குழுமம், திறமையான தலைமையின் கீழ் தான் ஒப்படைக்கப்பட்டு உள்ளது,’’ என, டாடா குழுமத்தின் கவுரவ தலைவர், ரத்தன் டாடா பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
அவர், ‘சி.என்.பி.சி – டிவி 18’ டிவிக்கு அளித்த பேட்டி: டாடா குழுமம், திறமைசாலியான, டாடா சன்ஸ் தலைவர், என்.சந்திரசேகரன் தலைமையில், சிறப்பாக செயல்படுகிறது. பாரம்பரிய நன்னெறி நடைமுறைகளை பின்பற்றுவதில், சிறிதளவும் சமரசம் செய்து கொள்ளாமல், டாடா நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. டாடா குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்கள், மறைந்து போயிருக்கலாம்; புதிய நிறுவனங்கள் உருவாகி இருக்கலாம். ஆனால், டாடா குழும நிறுவனங்கள் என்றுமே, நன்னெறியில் இருந்து வழுவியதில்லை.
குழுமத்தின் தோற்றம் மாறி இருக்கலாம். அடுத்த, 30 ஆண்டுகளில், மாறுபட்ட மற்றொரு வடிவெடுக்கலாம். ஆனால், எப்போதும் வர்த்தகத்தில் கடைப்பிடித்து வரும் நன்னெறிகளின் தரம் மட்டும் மாறவே மாறாது. டாடா குழுமம், உப்பு முதல் சாப்ட்வேர் வரை, பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறது. டாடா நிறுவனங்களின் வருவாயில், பெருமளவு, சாதாரண மனிதர்களின் முன்னேற்றம் மற்றும் சமூக நலனுக்கான நற்காரியங்களுக்குத் தான் செல்கிறதே தவிர, நிறுவனர்கள் அல்லது குழும தலைவர்களின் பாக்கெட்டுக்கு செல்வதில்லை.
இந்த கொள்கையை, டாடா குழுமம், தொடர்ந்து உறுதியாக கடைப்பிடித்து வருகிறது. டாடா குழுமம், 2018ல், 150வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சில நிறுவனங்கள் பிரிந்தாலும், இவ்வளவு காலம், குழும நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்படுவதை பார்க்கும் போது மனம் பூரிக்கிறது. இந்த ஒற்றுமையை தொடர்ந்து காத்து வருவதற்கு, எந்த விலையும் கொடுக்க, நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
டாடா குழும நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகள், டாடா சன்ஸ் நிறுவனம் வசம் உள்ளன. இந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்த, சைரஸ் மிஸ்திரி, 2016 அக்., 24ல், அதிரடியாக நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்தும், இந்தாண்டு பிப்., 6ல் வெளியேற்றப்பட்டார்.சைரஸ் மிஸ்திரியின் நீக்கத்தை தொடர்ந்து, டாடா சன்ஸ் தலைவராக, என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
சைரஸ் மிஸ்திரி மனு ஏற்பு:
டாடா சன்ஸ், அடக்குமுறையை கையாள்வதாகவும், நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை என்றும் கூறி, சைரஸ் மிஸ்திரியின் இரு நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டு உள்ளன. நிறுவனங்கள் சட்ட விதிப்படி, டாடா சன்சில், குறைந்தபட்சம், 10ல் ஒரு பங்கு வைத்துள்ளோர் மட்டுமே, வழக்கு தொடர முடியும். எனவே, இந்த விதிமுறையில் இருந்து விலக்களிக்க, டாடா சன்சில், குறைந்த பங்கு மூலதனத்தை கொண்டுள்ள, சைரஸ் மிஸ்திரி நிறுவனங்கள் கோரி இருந்தன. இதை தீர்ப்பாயம் ஏற்று, டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.