இணைய அழைப்புகளுக்கு இணையாக மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும்: டிராய் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. தொலைபேசி கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)  அழைப்பு இணைப்பு கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசாக குறைத்து அறிவித்தது. ஒரு நிறுவன தொலைபேசி எண்ணில் இருந்து மற்றொரு தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும்போது, அழைப்பை பெறும் நிறுவனத்துக்கு இந்த கட்டணம் செலுத்தப்படுகிறது. இதை குறைத்ததன் மூலம் மொபைல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டிய நிலைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.   இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் மொபைல் அழைப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப், ஸ்கைப், ஹைக் போன்றவற்றில் இணைய இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். டேட்டா பேக்கேஜ் இருந்தால் போதும். இலவசமாகவே பேசலாம். சாதாரண போன் அழைப்புகளுடன் ஒப்பிடும் போது இவற்றுக்கான செலவு நிமிடத்துக்கு ஒரு காசுக்கும் குறைவுதான்.  ஆனால், சாதாரண போன் வைத்திருப்பவர்கள் நிமிடத்துக்கு குறைந்த பட்சம் 30 முதல் 35 காசு செலவிட வேண்டியுள்ளது. சாதாரண போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில், இவர்கள் மீது கட்டண சுமையை திணிப்பது நியாயமல்ல. எனவே, இணைய அழைப்புகளுக்கு இணையாக அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என டிராய் வலியுறுத்தியுள்ளது.* வாட்ஸ்ஆப், ஸ்கைப்பில் பேச நிமிடத்துக்கு ஒரு பைசாவுக்கு மேல் செலவில்லை.* சாதாரண போன் வைத்திருப்பவர்கள் நிமிடத்துக்கு குறைந்தது 30 பைசா செலவிடுகின்றனர்.* ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை விட, சாதாரண போன் வைத்திருப்பவர்கள் அழைப்புக்கு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.

மூலக்கதை