குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

உடன்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவிழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து கோயிலில் வழங்குவர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடந்தது.

9 மணிக்கு கொடியேற்றத்துடன் தசரா விழா துவங்கியது.
இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் காலை 8 முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.   இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.

23ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 24ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 25ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 26ம் தேதி இரவு சிம்மவாகனத்தில் மகிசா சூரமர்த்தினி திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

27ம் தேதி மாலை 4. 30 மணிக்கு மகிசாசூரன் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி இரவு 9 மணிக்கு கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 29ம் தேதி இரவு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி காலை 10. 30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.

நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

அக். 1ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி சந்தன அபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து திருத்தேரில் பவனி வந்து தேர்நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்படுதல், மாலை 5. 30 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்தலும் நடைபெறுகிறது.

வேடப்பொருள்கள்தசரா விழாவையொட்டி வேடம்  அணியும் பக்தர்கள் அணிந்து கொள்ளும் மாலைகள், நீண்ட ஜடையுள்ள முடிகள்,  மாடலிங் முடிகள், அலங்கார முடிகள், கிரீடங்கள், அம்மனின் கைகள், ஈட்டி,  கத்தி, அம்பு, வில், கண்மலர் மற்றும் பல பொருட்களை தயாரிக்கும் பணியில்  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உடன்குடி, குலசேகரன்பட்டினம், ஆறுமுகநேரி,  திருச்செந்தூர் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை