இணைப்பு கட்டணம் குறைப்பு: ஏர்டெல், வோடபோன் புலம்பல்
புதுடில்லி : தொலை தொடர்பு சேவையில், இணைப்பு கட்டணத்தை, ‘டிராய்’ குறைத்துள்ளதற்கு, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரு நிறுவன வாடிக்கையாளர், வேறு ஒரு நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவையை பயன்படுத்துவதற்கு, இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் தற்போது, ஒரு நிமிடத்திற்கு, 14 காசுகளாக உள்ளது; இதை, அக்., 1 முதல், 6 காசுகளாக, ‘டிராய்’ குறைத்துள்ளது. 2018 ஜன., 1 முதல், இந்த கட்டணம் அடியோடு ரத்து செய்யப்பட உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கட்டண செலவு குறையும். ஆனால், இந்த கட்டண குறைப்புக்கு, ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
‘ஏற்கனவே, நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், கட்டண குறைப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்; கிராமப்புறங்களில், தொலை தொடர்பு சேவையை விரிவுபடுத்த முடியாது’ என, அவை கூறியுள்ளன. ‘ரிலையன்சின் ஜியோ மட்டுமே, இந்த கட்டண குறைப்பால் பயன் அடையும்’ எனவும், பாரபட்சமான, பிற்போக்குத் தனமான முடிவை, ‘டிராய்’ எடுத்துள்ளதாகவும், அவை குற்றஞ்சாட்டி உள்ளன. இது தொடர்பாக, நீதிமன்றத்தை நாடவும் அவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.