உடனடியாக ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்க கோரிக்கை
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., நடைமுறையின் கீழ், செலுத்திய வரியை விரைவில் திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஏற்றுமதி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஜி.எஸ்.டி.,யில் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆராய, மத்திய வருவாய் துறை செயலர், ஹஸ்முக் அதியா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று, பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜய் சஹாய், டைரக்டர் ஜெனரல், எப்.ஐ.இ.ஓ.: ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்றும் 3பி படிவங்களில், தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் கீழ் செலுத்திய வரியை, உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். அவ்வாறு வழங்காதபட்சத்தில், அக்டோபரில், ஏற்றுமதியாளர்களுக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கும் அபாயம் உள்ளது. இதனால், நடைமுறை மூலதன பற்றாக்குறை பாதிப்பு ஏற்படும்.
பி.கே.ஷா, நிர்வாக உறுப்பினர், இ.இ.பி.சி.: பண்டிகை காலம் நெருங்குவதால், ஏற்றுமதி செய்த உடன், செலுத்திய வரியில், 90 சதவீதத்தை உடனடியாக திரும்ப அளித்து, பின், முழுமையான சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்; வரி கழிவுகளை சரி செய்து கொள்ளலாம்.
பி.அகமது, துணைத் தலைவர், சி.எல்.இ.: ஜி.எஸ்.டி.,யால், ஏற்றுமதியாளர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்துள்ளது. அதனால், உடனடியாக, செலுத்திய வரியை திரும்ப தர வேண்டும்.
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை: ஏற்றுமதிக்கான ஆபரணங்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க வேண்டும்.