மகிந்திராவின் டிரைவர் இல்லா புதிய டிராக்டர்கள்
சென்னை : மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா டிராக்டர் நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக, டிரைவர்கள் தேவைப்படாத, டிராக்டரை அறிமுகம் செய்து உள்ளது.இந்த டிராக்டர்களை, டேப்லட் போன்ற சாதனங்கள் உதவியுடன், தொலைவிலிருந்து இயக்க முடியும். இந்த டிராக்டர், 2018 துவக்கத்தில், விற்பனைக்கு வர இருக்கிறது.
முதலாவதாக, டிரைவர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய தேவையை குறைப்பதற்கும், இரண்டாவதாக, முழுக்கவே டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் டிராக்டர்களை தயார் செய்வதற்கும், முன்னுரிமை வழங்கி வருவதாக, மகிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை டிராக்டரை தயாரிக்கும் பணிகள், சென்னையில் உள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கூறுகையில், ‘‘இவ்வகை டிராக்டர்களால் விளைச்சல் அதிகரிக்கும்; செலவும் குறையும்,’’ என்றார்.
டிரைவர் இல்லா டிராக்டர் மட்டுமின்றி, மின்சாரத்தில் இயங்கும், எலக்ட்ரிக் டிராக்டர் தயாரிப்பிலும், இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.