பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில்... முரண்பாடு! விபரம் தெரியாமல் விவசாயிகள் புலம்பல்

தினமலர்  தினமலர்
பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில்... முரண்பாடு! விபரம் தெரியாமல் விவசாயிகள் புலம்பல்

கடலுார் : மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டு தொகை வழங்குவதில் முரண்பாடு நிலவி வருவதால் என்ன செய்வது என புரியாமல் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.


விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் அடிக்கடி இயற்கை சீற்றம் ஏற்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இயற்கை சீற்றம் மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அதிகாரிகளின் அறிவுரைப்படி மாவட்ட விவசாயிகள் நெல் உள்ளிட்ட பிரதான பயிர்களை காப்பீடு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நோக்கி 2.52 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பட்டத்தில் நெல்லும், 28 ஆயிரம் ஏக்கரில் மானவாரி பயிர்கள் பயிரிடப்பட்டது. அதில் 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களை மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்தனர். அதற்காக விவசாயிகள் பிரிமியத் தொகையைாக 5.79 கோடி ரூபாய் செலுத்தினர்.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தினால், சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகின. அதனையொட்டி தமிழக அரசு கடலுார் உள்ளிட்ட 31 மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்கியது. தொடர்ந்து காப்பீட்டு தொகை கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இன்சூரன்ஸ் விதிமுறைகளின்படி, இயற்கை பேரிடர் அழிவு என அறிவித்த 90 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஆனால், அரசு வறட்சி பாதிப்பாக அறிவித்து 8 மாதங்களாகியும் காப்பீடு தொகை வழங்காததால் விவசாயிகள் செய்வதறியாமல், அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில், பயிர் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., லும்பார்ட் நிறுவனம், நெல் பயிருக்கான காப்பீட்டு தொகையாக 93 கோடி ரூபாயை கடந்த இரண்டு வாரத்திற்கு முன் விடுவதித்தது. அதில் 84 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.இதில் பல விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை குறைவாக வந்துள்ளது. அதில், காப்பீட்டு தொகை எவ்வளவு பரப்பளவிற்கு, மகசூல் பாதிப்பு எத்தனை சதவீதம் என்ற எந்த விபரமும் இல்லாததால் விவசாயிகள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 'கடந்தாண்டு பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில் 5.79 கோடி ரூபாய் மாவட்ட விவசாயிகள் காப்பீடு நிறுவனத்திற்கு பிரிமியத் தொகையாக செலுத்தினர். இதன்படி 383 கோடி ரூபாய் காப்பீடு பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டது. வறட்சி பாதிப்பை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் அன்னவாரி சான்றிதழ் தாசில்தாரால் வழங்கப்பட்ட நிலையில் தற்போதுதான், காப்பீடு நிறுவனம் 93 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்துள்ளது. ஒரு ஏக்கரில் எத்தனை சதவீதம் பாதிப்பு என்ற விபரம் இல்லை. பெரும்பாலான விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ள போதிலும், முழுமையான நிவாரணம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். காப்பீடு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாமல், தனக்கு சாதகமாக வழிமுறைகளை மீறி செயல்படுகிறது' என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, வங்கிகளில் கடன் பெறாமல், நேரடியாகவும், தேசிய வங்கிகள் மூலம் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அவர்கள் காப்பீடு செய்த பரப்பளவில் பாதிக்கும் குறைவான அளவிற்கே காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காப்பீடு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பதில் கிடைத்த பிறகே விபரம் தெரிய வரும் என்றனர்.

மூலக்கதை