புதிய பங்கு வெளியீடு ஹட்கோ வருகிறது
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஹட்கோ’ எனப்படும், ‘ஹவுசிங் அண்டு அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ வீட்டுவசதி திட்டங்களுக்கு, கடன் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,200 கோடி ரூபாய், நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும் மே மாதம், 8ல் துவங்கி, 11ல் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பங்கின் வெளியீட்டு விலை, 50 முதல் 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஹட்கோ தலைவர் ரவிகாந்த் கூறுகையில்,‘கடந்த, 2012ல் இருந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தற்போது தான், புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டப்பட உள்ளது. இதன் மூலம், எங்கள் நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு குறையும்,’ என்றார்.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தன் வசம் உள்ள பங்குகளை வெளியிட்டு, 72 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த நிதியாண்டில், 45 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருந்தும், அரசால், அந்த இலக்கை எட்டமுடியாமல் போய்விட்டது.