தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி?
புதுடில்லி:குறைந்த தரத்தில், பாதுகாப்பற்ற பொருட்களின் இறக்குமதியை தடுக்க வேண்டுமென்றால், உள்நாட்டு நிறுவனங்கள், தரமான பொருட்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:டில்லியில், மே 1, 2ம் தேதிகளில், நான்காவது தேசிய தரங்கள் மாநாடு நடைபெற உள்ளது.
வர்த்தக சூழல்
இதில், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், ஒரே சீரான, மேம்பட்ட தரக் கொள்கையை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும். பொருட்களை தரமாக தயாரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கேற்ப தொழிற்சாலைகளை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
சர்வதேச வர்த்தக சூழல் மாறி வருகிறது; தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கேற்ப, இந்திய நிறுவனங்களும் தரமான பொருட்களை தயாரிக்க வேண்டும்.பொருட்களின் தரம், அவற்றுக்கான அளவுகோல் ஆகியவற்றை வகைப்படுத்தி, அவற்றை கண்காணிப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து, மத்திய, மாநில அரசு துறைகள், தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்படும்.
பெருமை சேர்க்கும்
நாடு தழுவிய அளவில், சீரான தர நடைமுறைகளை பின்பற்றி பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். இது, நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்பதுடன், குறைந்த தரத்தில், பாதுகாப்பற்ற பொருட்கள் இறக்குமதியாவதை தடுக்க உதவும்.
பலமுனை வரிகளை அகற்றி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறை, அமலுக்கு வர உள்ள நிலையில், பொருட்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர, மாநாடு துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.