காஷ்மீர் இளைஞர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்தணும்: சுப்ரீம் கோர்ட்

தினமலர்  தினமலர்
காஷ்மீர் இளைஞர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்தணும்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தும் மாணவர்கள், வன்முறையை கைவிட வேண்டும்; கல்லுாரிகளுக்கு திரும்ப வேண்டும். அப்போது மட்டுமே அமைதி திரும்பும்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுரை கூறியுள்ளது.

வழக்கு:


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கு எதிராக, பிரிவினைவாத அமைப்புகள் போராட்டங்களை துாண்டி வருகின்றன. பல்வேறு இடங்களில், வீரர்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 'அங்கு, பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். வீரர்கள், பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஜம்மு - காஷ்மீர் மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஒத்துழைப்பு:


இந்த வழக்கு நேற்று, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப, அரசு மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துவதை, மாணவர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.வன்முறையை கைவிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு திரும்ப வேண்டும். அரசு பேச்சு நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் கட்சிகளுடன் பேச்சு :


ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.அப்போது அவர், கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம், பிரிவினைவாத அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்த முடியாது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் படை :


ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி பெண்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த, பெண்கள் மட்டுமே உள்ள, துணை ராணுவ படை பிரிவை, அங்கு அனுப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மூலக்கதை