தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் வளையல்கார தெருவைச் சேர்ந்தவர் குமார் (40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் மணிலா பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக திட்டம் தீட்டியுள்ளார். தோட்டத்திற்குள் வரும் காட்டுப்பன்றிகள் முதலில் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பது வழக்கம்.

இதனால் குமார் தனியாக மின்வேலி அமைக்காமல் தண்ணீர் தொட்டியில் மட்டும் மின்கம்பியை போட்டு இணைப்பு கொடுத்துவிட்டுச்சென்றுள்ளார்.

இந்நிலையில் பக்கத்து கிராமமான கண்டம்பாக்கம் மேற்கு தெருவைச் சேர்ந்த வேலாயுதம் (68), சின்னத்தெருவை சேர்ந்த மகாதேவன் (46) ஆகிய இருவரும் நேற்றிரவு குமாரின் நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளனர். மின்கம்பியை போட்டுள்ளது தெரியாததால் அவர்கள் இருவரும் தண்ணீரில் காலை வைத்ததும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களைப்பார்த்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.


.

மூலக்கதை