பூண்டி ஒன்றியத்தில் கால்வாயில் புதர் விவசாயம் பாதிப்பு
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியத்தில் சீத்தஞ்சேரி, அம்மம்பாக்கம், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மழைநீரை தேக்கி வைக்க அம்மம்பாக்கத்திலிருந்து சீத்தஞ்சேரி வழியாக சீத்தஞ்சேரி ஏரிக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
இக்கால்வாயில் செடிகொடி வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை அதிகாரிகள் கால்வாயை சீரமைத்தனர். தற்போது குப்பை கொட்டும் பகுதியாகவும் வீடுகளின் கழிவுநீர்விடும் இடமாகவும் ஏரிக்கால்வாய் மாறிவிட்டது.
இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அம்மம்பாக்கம் - சீத்தஞ்சேரி ஏரிக்கால்வாயை சீரமைத்து கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மழை காலத்தில் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்காக சீத்தஞ்சேரி ஏரி கால்வாய் அமைக்கப்பட்டது.
தற்போது இக்கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் விடப்படுகிறது.
குப்பை, கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்தால் மழைகாலத்தில் தங்குதடையின்றி ஏரிக்கு நீர் வரும்.
ஏரி நிரம்பினால் சீத்தஞ்சேரியை சுற்றியுள்ள விவசாயிகள் பயனடைவார்கள்” என்றார்.