பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் 10வது நாளாக போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் 10வது நாளாக போராட்டம்

சென்னை: பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

இதனால், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு  மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உடனடியாக சிகிச்சை  கிடைக்காமல் சென்னையில் 50 ஆயிரம் உட்பட தமிழகம் முழுவதும் 5 லட்சம் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

அரசு டாக்டர் சங்கத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், தோல்வியில் முடிந்தது.

இதனால், வழக்கம் போல் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இன்று 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை  ஸ்டான்லி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது,  இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை நீதிமன்றம்  ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. எங்களது போராட்டம் ஒரு புறம் இருந்தாலும், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறோம்.

எங்களது இடைவெளி நேரத்தில் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் ஆங்காங்கே தர்ணா, மனித சங்கிலி அந்தந்த மாவட்ட டாக்டர் சங்கத்தினர் கூடி முடிவு எடுப்பர்.   ஓரிரு தினங்களில் எங்களது சங்கத்தின் மாநில கூட்டம் இருக்கிறது.

அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யவுள்ளோம்’ என்றார்.

.

மூலக்கதை