மத்திய பாதுகாப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கேட்டு போராட்டம்: தி.க.வினர் கைது
ஆவடி: தமிழ்நாட்டில் இயங்கும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு, தொழிற்பழகுநர் பயிற்சியிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், தமிழ் அதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம், இடமாற்றம் செய்யும் வடமாநில அதிகாரிகளை கண்டித்து, ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையை (ஓசிஎப்) முற்றுகையிட நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். பின்னர், மத்திய பாதுகாப்பு நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆவடி படை உடை தொழிற்சாலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை ஆவடி போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
அங்கு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாவட்ட செயலாளர்கள் ஆவடி நாகராசன், குமரன், கண்ணதாசன், தமிழர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் எழுச்சி இயக்க நிர்வாகி வேலுமணி உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பஸ், வேன்களில் ஏற்றி, ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அதன்பிறகு நேற்று மாலை அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.