இரட்டை இலைக்காக லஞ்சம்… தினகரனுக்கு 4 நாள் போலீஸ் காவல்... கோர்ட் அனுமதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இரட்டை இலைக்காக லஞ்சம்… தினகரனுக்கு 4 நாள் போலீஸ் காவல்... கோர்ட் அனுமதி

டெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து டெல்லி போலீஸார் நட்சத்திர விடுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லி போலீசாரிடம் கடந்த 22ஆம் தேதி தினகரன் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இருவரும் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரத்தை சமர்ப்பித்தும் தினகரன் ஒத்துக் கொள்வதாயில்லை. இதைத் தொடர்ந்து சுகேஷை தினகரன் இருந்த அறைக்கு அழைத்து சென்று நேருக்கு நேர் விசாரணை நடத்தினர்.

அப்போது ஹவாலா கும்பல் மூலம் தினகரன் தமக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்மையை ஒப்புக் கொண்ட தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தினகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நண்பர் மல்லிகார்ஜூனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் 7 நாட்களுக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினகரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

மூலக்கதை