'மகாபாரதம்' வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் - பிரபாஸ்

தினமலர்  தினமலர்
மகாபாரதம் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்  பிரபாஸ்

'பாகுபலி 2' குழுவினரின் மார்க்கெட்டிங் டெக்னிக்கை மற்றவர்களும் சரியாகப் பின்பற்றினாலே போதும், டிவிட்டரில் பொய்யாகப் பதிவிடும் 100 கோடி ரூபாயையாவது தங்களது படங்களின் வசூலாக அள்ளிவிடலாம். 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெளியாகும் அளவிற்கு சற்றும் குறைவில்லாமல் கேரளாவிலும் வெளியாக உள்ளது. மலையாளப் படங்களையும் மிஞ்சும் அளவிற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'பாகுபலி 2' படம் கேரளாவில் வெளியாக உள்ளது.

கேரளாவில் இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, கலை இயக்குனர் சாபுசிரில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், “மகாபாரதம்' படத்தில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். மோகன்லால் அவர்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்,” எனத் தெரிவித்தார்.

பிரபாஸின் இந்தப் பேச்சு மோகன்லால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் யதார்த்தமாகப் பேசியிருந்தாலும் மோகன்லாலைப் பற்றி அவர் பெருமையாக வெளிப்படுத்திய விதம் பிரபாஸ் மீதும் மலையாள ரசிகர்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி நடிகரான கமல்கான் மோகன்லாலைப் பற்றி விமர்சித்து , மலையாள ரசிகர்களின் எதிர்ப்புக்குப் பின் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மோகன்லால் மீது தனக்குள்ள மரியாதையை பிரபாஸ் வெளிப்படுத்தி மலையாள ரசிகர்களின் பாராட்டுக்கும் ஆளாகிவிட்டார்.

மூலக்கதை