ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும்
புதுடில்லி : அமலுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், சிறிய மற்றும் நடுத்தர வகை கார்கள் விலை உயரும். பல்வேறு பொருட்களுக்கு ஏற்ப, 1, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வகையாக, சரக்கு மற்றும் சேவை வரி பிரிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, சிறிய கார்களுக்கு, மத்திய விற்பனை வரி, 12.5 சதவீதம் மற்றும் மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி, 14.5 – 15 சதவீதம் என்றளவில் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு சிறிய காருக்கு, 27 – 27.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.,யில், சிறிய கார்கள், 28 சதவீத வரியின் கீழ் வரும் என, தெரிகிறது. இதனால், சிறிய கார்களின் விலை, ஜி.எஸ்.டி.,யில் சிறிதளவு உயரும்.
நடுத்தர வகையைச் சேர்ந்த, 1,500 சிசி இன்ஜின் திறனுள்ள கார்களுக்கு, தற்போது, 24 சதவீத மத்திய விற்பனை வரியுடன், 14.5 சதவீத, மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இவ்வகை கார்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீத வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, புகையிலை, பான்பராக், ஒருசில சொகுசு வாகனங்கள் ஆகியவற்றுக்கு, கூடுதலாக, 15 சதவீதம் ஆயத் தீர்வை விதிக்கப்பட உள்ளது. இதையும் சேர்த்து கணக்கிடும் போது, நடுத்தர வகை கார்களுக்கான வரி, தற்போது உள்ளதை விட, 4.5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெரிய வகை, எஸ்.யு.வி., கார்களுக்கு, தற்போது, விற்பனை வரி, 27 – 30 சதவீதம்; மதிப்பு கூட்டு வரி, 14.5 சதவீதம் என, மொத்தம், 41.5 – 44.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.இது, ஜி.எஸ்.டி.,யில், 43 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.