டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தும் பிரச்சினை தொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அ.தி.மு.க. (அம்மா) அணியின் வலைத்தளம், முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தேர்தல் கமி‌ஷனிடம் ஆதாரங்களுடன் புகார் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரனிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக நேற்று தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் உங்கள் அணிக்கு தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும் வழங்கியுள்ள நிலையில் உங்கள் அணியின் அதிகாரபூர்வமான வலைத்தளம், முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இரட்டை இலை சின்னத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றி எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது.

கடந்த மார்ச் 22–ந் தேதி தேர்தல் கமி‌ஷன் வெளியிட்ட உத்தரவின்படி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமி‌ஷன் இந்த வி‌ஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இந்த சின்னத்தை தங்களின் வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களில் பயன்படுத்துவது தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செயலாக கருதப்படும்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஊழல் தொடர்பான செயல்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951–ன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு தவறான தகவல்களை தருதல் அல்லது வாக்காளர்களை குழப்பும் வகையில் தகவல்களை அளித்தல் ஊழல் தொடர்பான செயலாக கருதப்படுகிறது.

எனவே, உங்கள் அணியின் பிரசாரங்களிலோ அல்லது உங்கள் வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களிலோ இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிடுகிறது.

இந்த அத்துமீறல் தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சின்னங்கள் பற்றிய தேர்தல் கமி‌ஷனின் உத்தரவு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக உங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து உங்களுடைய பதிலை வருகிற 6–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள் தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை