ஈரான் சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை: சுஷ்மா சுவராஜ் தகவல்
ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைதான 15 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள தித்திக்கும் தகவலை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ளார்.
பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மீன்பிடி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவர்கள் 15 பேரும் ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக மூன்று படகுகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஈரான் நாட்டு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கைதான தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன் பலனாக அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துவந்த ஈரான் நாட்டு தலைமை தூதரக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.