வில்பத்துக்கு வடக்கே மற்றுமொரு சரணாலயம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
வில்பத்துக்கு வடக்கே மற்றுமொரு சரணாலயம்

வில்பத்துக்கு வடக்கே மற்றுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக் காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கப்பட்டதுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கான திரைமறைவில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டோர்   இந்தத் தகவலை வனபரிபால திணைக்கள அதிகாரிகள் தங்களிடம் வெளிப்படுத்தியதகவும் கவலையடைந்தனர். 

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யக்கோரி மறிச்சிக்கட்டியில் இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தையும் எதிர்ப்பையும் முன்னெடுத்துவரும் கரடிக்குழி, பாலைக்குழி, மறிச்சிக்கட்டிப் பிரதேச மக்கள் தமது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மனிதநேயங்கொணடவர்கள் உதவ வேண்டுமெனவும் கோரினர். முடியுமானால் தத்தமது பிரதேசங்களிலும் தமது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை (31) மறிச்சிக்கட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.  

“எமது போராட்டத்துக்கு வெற்றி கிடைக்காவிட்டால் இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவலராலயங்களிலும் முறையிடுவோம் மறியல் போராட்டங்களையும் நடத்துவோம். நாங்கள் 26 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்.  

சொந்த மண்ணில் இருந்து நாங்கள் விரட்டப்பட்டு இத்தனை வருட காலமாக அகதியாக இருந்த பின்னர் இந்த மண்ணுக்கு மீண்டும் இந்த மண்ணுக்கு வந்து சுவாசிக்க நினைக்கும் போது நாங்கள் உருவாக்கிய அரசே எமக்கு அநீதி இழைத்துள்ளது. எங்கள் விரல்களைக் கொண்டே எமது கண்களை குத்திக்கொண்டோம். புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைளுக்கு நிகரான இன்னுமொரு நடவடிக்கையே தற்போது அரங்கேற்றப்பட்டு வருகிறது” என்றும் பாதிக்கப்பட்டோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

முசலிப்பிரதேசத்தில் உள்ள விலங்குகளுக்கு காட்டும் கருணையைத் தானும் எங்களுக்கு காட்டுகிறார்கள் இல்லை. ஜெனீவா வரை இந்தக்கொடுமையைக் கொண்டு செல்வதற்து அரசியல் தலைமைகளும் சமூக ஆர்வலர்களும் உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். 

மூலக்கதை