நெல்லை அருகே கார் விபத்துக்குள்ளானதில் இருட்டு கடை அல்வா உரி்மையாளரின் மகள் உட்பட 2 பேர் பலி
நெல்லை: வத்தலகுண்டு அருகே கார் மரத்தில் மோதியதில் இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் உள்பட இருவர் பலியாகினர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். பெங்களூரு விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி இந்துராணி மற்றும் குடும்பத்தினருடன் காரில் பெங்களுருவில் இருந்து கேரளா நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை ஹரிபிரசாத் ஓட்டி வந்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மஞ்சளாற்று பாலம் அருகே வந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி போனது. இதில் ஹரிபிரசாத்தின் மாமியார மோகனா, இளைய மகள் தனிஷ்கா ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
படுகாயம் அடைந்த ஹரிபிரசாத், அவரது மனைவி இந்துராணி முத்த மகள் அஞ்சனா ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மோகனா நெல்லை இருட்டு கடை அல்வா உரிமையாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.