தொடங்கியது காலவரையற்ற லாரி வேலை நிறுத்தம்.. 18 லட்சம் சரக்கு லாரிகள் முடக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடங்கியது காலவரையற்ற லாரி வேலை நிறுத்தம்.. 18 லட்சம் சரக்கு லாரிகள் முடக்கம்

சென்னை: இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது. மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி வேலை நிறுத்தம் தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக நேற்று, டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய மாநில அரசுகள்

அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். ஆனால் தமிழக அரசு இதுதொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இணங்கவில்லை.

யார் யார் ஆதரவு

இதனால் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது.

தீர்வு எட்டும் வரை

6 மாநிலங்களில் இருந்து 9 லட்சம் லாரிகள் உள்பட மொத்தம் 18 லட்சம் வாகனங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா கூறியுள்ளார்.

எவ்வளவு இழப்பு?

இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் தினசரி 5 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

குடிநீர் லாரிகள்

சரக்கு லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் லாரிகள் ஓடாது என்று சென்னை குடிநீர் டேங்கர் லாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை