‘பெட்ரோல் விற்பனை முழுவதையும் ‘டிஜிட்டல்’ மயமாக்க வேண்டும்’
புதுடில்லி : ரொக்கப் புழக்கத்தை குறைக்க, பெட்ரோல் விற்பனை முழுவதையும், ‘டிஜிட்டல்’ மயமாக்க வேண்டும் என, மத்திய நிதித் துறை இணைஅமைச்சர் சந்தோஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
அவர், ராஜ்யசபாவில் கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், நாட்டில், 15.44 லட்சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றை திரும்பப் பெற்று, புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு வருகின்றன. அதில், நடப்பு, மார்ச், 10 நிலவரப்படி, 65 சதவீதம் புதிய கரன்சிகள் புழக்கத்திற்கு வந்துள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கூடுதலாக புழக்கத்திற்கு வரும், 2.5 – 3 லட்சம் கோடி ரூபாய் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு, டிஜிட்டல் முறையை கட்டாயமாக்கலாம்.
பெட்ரோல் நிலையங்களில், ஆண்டுக்கு, 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பரிவர்த்தனை நடக்கிறது. அதில், 20 சதவீதத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றினால் கூட, 1 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தை தடுக்கலாம். அதனால், பெட்ரோல் நிலையங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.