‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இத்துறையில், இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விலக்கு, காப்புரிமை கட்டண சலுகை, ஆய்வுக்கான வளர்ப்பக வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில், சில விதிமுறைகளால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வெளிநாடுகளில் பதிவு அலுவலகத்தை அமைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.அதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய, அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே, சில விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்தாண்டுக்குள், குறிப்பிட்ட விதிமுறைகள் மாற்றப்படும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுலபமாக நிதியுதவி பெற, விரைவில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், கடன் உத்தரவாத நிதியம் ஏற்படுத்தப்படும். இந்தியாவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, நிதியுதவி கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், அதற்கான செலவினம் அதிகமாக உள்ளது. அச்செலவினத்தை குறைக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில், தற்போது, 16 மாநிலங்கள், ஸ்டார்ட் அப் கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.