கொச்சியில் படக்குழுவை சரமாரியாக தாக்கிய ரவுடி கும்பல்: தயாரிப்பாளர் உள்பட 3 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொச்சியில் படக்குழுவை சரமாரியாக தாக்கிய ரவுடி கும்பல்: தயாரிப்பாளர் உள்பட 3 பேர் காயம்

திருவனந்தபுரம்- கொச்சியில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினரை ரவுடி கும்பல் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் ‘ஆகாச மிட்டாய்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி ஜெயராம் மற்றும் படக்குழுவினர் அதே ஓட்டலில் தங்கியுள்ளனர்.   நேற்று இரவு இந்த படத்தின் தயாரிப்பாளரான மகா சுபைர், தயாரிப்பு நிர்வாகி பாதுஷா மற்றும் திரைப்பட குழுவினர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10 பேர் அடங்கிய ரவுடி கும்பல், திடீரென படக்குழுவினரை சரமாரியாக தாக்கியது.

இதில் தயாரிப்பாளர் மகா சுபைர், பாதுஷா உள்பட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் கும்பல் ஓட்டலில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிசென்றது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காயமடைந்த 3 பேரும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கொச்சி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், தாக்குதல் நடத்தியது கொச்சி சம்பனம் பகுதியை சேர்ந்த அனீஷ் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது. போலீசார் ரவுடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை பாவனா படப்பிடிப்பு முடித்து காரில் வரும் போது கொச்சி அருகே காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் மலையாள படக்குழுவினர் ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம்.

மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை