கோதுமை, துவரம் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: கோதுமை மற்றும் துவரம்பருப்புக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டு என தெரிவித்துள்ளது. கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த டிச., 8ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில் துவரம்பருப்புக்கும், கோதுமைக்கும் அடிப்படை சுங்க வரியாக தலா 10 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கோதுமை தற்போது சந்தைக்கு வர துவங்கியுள்ளது. துவரம் பருப்பின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசின் இந்த வரிவிதிப்பு, விவசாயிகளுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்படுகிறது.