வரிசைகட்டும் இ – வாகனங்கள்; ஓகே பிளே இந்தியா அறிமுகம்
புதுடில்லி : இந்தியாவில், பிளாஸ்டிக் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ஓகே பிளே இந்தியா நிறுவனம், ‘இ – ராஜா’ பிராண்டின் கீழ், பேட்டரியில் இயங்கும், எட்டு இ – வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் ஹந்தா கூறியதாவது: வரும், 2030க்குள், அனைத்து துறைகளிலும், 100 சதவீதம் மின்னணு பயன்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், தொலை நோக்கு திட்டத்துடன், மத்திய அரசு செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பயணிகள் மற்றும் வர்த்தக வாகன பிரிவில், ‘இ – ரிக் ஷா, இ – மொபைல் கடைகள், இ – பள்ளி பேருந்துகள்’ உட்பட, எட்டு இ – வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இவற்றின் விலை, 1.25 லட்சம் – 1.5 லட்சம் ரூபாய். இவை, டீலர் நெட்வொர்க் மற்றும் துணை டீலர்கள் மூலமாக, விற்பனை செய்யப்படும்.
மேலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின், ஆறு இ – இருசக்கர வாகனங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள, ஆறு உற்பத்தி தொழிற்சாலைகளில், இ – வாகனங்கள் தயாரிக்கப்படும். மேலும், நான்கு தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.