சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம்
புதுடில்லி : சரக்கு போக்குவரத்து துறைக்கு என, தனி பிரிவு ஒன்றை ஏற்படுத்த, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
சாலை, ரயில், விமானம், கடல் உள்ளிட்டவை வாயிலாக மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்திற்கு என, தனி துறையோ அல்லது அமைச்சகமோ, தற்போது இல்லை.அதனால், சரக்கு போக்குவரத்து சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் கோரி வருகின்றனர்.சரக்கு ஏற்றுமதிக்கான போக்குவரத்து செலவினம் அதிகமாக உள்ளதால், இந்திய பொருட்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க திணறுகின்றன.
சரக்கு ரயில் கட்டண உயர்வு, போக்குவரத்தில் தாமதம், இணைப்பு சாலைகள் இல்லாதது போன்றவற்றால், அதிக அளவிலான சரக்கு பெட்டகங்கள், சாலை வழியே கொண்டு செல்லப்படுகின்றன. அதனால், சரக்கு போக்குவரத்தில், ஏற்றுமதி, இறக்குமதி, உள்நாட்டு பயன்பாடு ஆகியவற்றுக்கு தனித்தனியாக சரக்கு போக்குவரத்து கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என, வர்த்தக அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்திட்டம் அமலானால், சர்வதேச சந்தையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியை சமாளிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில், இந்தியாவின் பங்கு, தற்போது, 2 சதவீதமாக உள்ளது. இதை, 2020ல், 3.5 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால், சரக்கு போக்குவரத்துக்கு என, தனி பிரிவை ஏற்படுத்தி, பல்வேறு பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண, வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.