கொச்சி இளம்பெண் மானபங்கம் பிரபல சினிமா கதாசிரியருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள பிளாட்டில் வசித்த இளம்பெண்ணை மானபங்கம் செய்த மலையாள சினிமா கதாசிரியருக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் ஏரநாடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹாஷிர்(30). ஏராளமான மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். கடந்த 2016ல் சினிமாவுக்கு கதை எழுதுவதற்காக, கொச்சி மரடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அங்கிருந்து தொடர்ந்து திரைக்கதைகள் எழுதி வந்தார். இந்த நிலையில், பக்கத்து பிளாட்டில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவரை மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மரடு போலீசில் புகார் செய்தார். போலீசார் முகமது ஹாஷிரை கைது செய்து, அவர் மீது எர்ணாகுளம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இளம்பெண்ணை மானபங்கம் செய்த சினிமா கதாசிரியர் முகமது ஹாஷிருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.