'ஆணாதிக்க தயாரிப்பாளர்கள்': வரலட்சுமி குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
ஆணாதிக்க தயாரிப்பாளர்கள்: வரலட்சுமி குற்றச்சாட்டு

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி மலையாளத் தயாரிப்பாளர்களைத் திட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'அப்பா' திரைப்படத்தின் மலையாள ரீமேக்கான 'ஆகாஷ மிட்டாய்' படத்தின் பூஜையும், படப்பிடிப்பும் சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஆரம்பமானது. அப்படத்தில் நடிக்கும் ஜெயராம், வரலட்சுமி ஆகியோர் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார்கள். வரலட்சுமியும் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு மீண்டும் மலையாளத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆனால், ஒரே நாளில், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டி படத்திலிருந்து வரலட்சுமி விலகிவிட்டார். தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வரலட்சுமிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாது என வரலட்சுமி தெரிவித்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் வரலட்சுமி அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை, அதனால் அவரை நீக்கி விட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதனிடையே, இன்று காலை டிவிட்டரில் தயாரிப்பாளர்கள் குறித்து வரலட்சுமி கடுமையான வார்த்தைகளுடன் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “என்னுடைய முடிவிற்கு ஆதரவளித்த சமுத்திரக்கனி சார், ஜெயராம் சார் ஆகியோருக்கு நன்றி. ஆணாதிக்கம் கொண்ட, பண்பில்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணி புரிய முடியாது. பெண்களை மதியுங்கள்,” என கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

பத்து நாட்களுக்கு முன்னர்தான் 'சேவ் சக்தி' என்ற பெண்களுக்கு ஆதரவான அமைமப்பை வரலட்சுமி தொடங்கினார். அதற்குள்ளாகவே அவருக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை