‘19 சதவீத மக்கள் இன்னும் வங்கி சேவை பெறவில்லை’
புதுடில்லி : ‘இந்தியாவில், வங்கி சார்ந்த சேவைகளை, இதுவரை, 19 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெறவில்லை’ என, அசோசெம் அமைப்பு மற்றும் யர்னஸ்ட் அண்டு யங்க் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: அனைத்து மக்களும் நிதி செயல்பாடுகளில் ஈடுபட, அவர்களை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி, கூட்டுறவு வங்கிகள், பிராந்திய நகர்ப்புற வங்கிகள், முன்னுரிமை அடிப்படையில் கடன்களை வழங்க இலக்கு நிர்ணயித்தல் ஆகியவற்றின் மூலம், பொதுமக்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகின்றன.
மேலும், சுயஉதவிக் குழுக்கள் அமைப்போருக்கு கடன் வழங்குதல், வர்த்தக ஆலோசகர்களை நியமித்தல், வீடு தேடி சென்று கடன் அளிக்கும் திட்டம் போன்றவற்றையும் வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய பல அம்சங்கள் இருந்தும், இதுவரை, 19 சதவீதத்திற்கும் அதிகமானோர், வங்கி சார்ந்த சேவைகளை பெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.