அரசு துறையில் தனியார் வல்லுனர்கள்; ‘நிடி ஆயோக்’ பரிந்துரை ஏற்பு
புதுடில்லி : ‘அரசு துறைகளில், பணி மூப்பு அடிப்படையில், உயர் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், வெளியில் இருந்தும் தகுதி வாய்ந்த வல்லுனர்களை பணி அமர்த்தலாம்’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
‘ஒரு துறையில் முழுமையான ஆற்றல், அனுபவம் உள்ளவரை, அத்துறை சார்ந்த அரசு பதவியில் அமர்த்தும் போது, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அத்துறை பெறும்’ என, நிடி ஆயோக் தெரிவித்து உள்ளது. அதன்படி, மத்திய அரசு, வெளியில் இருந்து, 50 வல்லுனர்களை, அரசு துறைகளில் பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலராக, ராஜஸ்தானைச் சேர்ந்த, ராஜேஷ் கோடேச்சா நியமிக்கப்பட்டு உள்ளார். ஆயுர்வேதத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், குஜராத் ஆயுர்வேத பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
‘இவரை தொடர்ந்து, பல்வேறு துறைகளில், அந்தந்த துறைகளில் முழுமையான நிபுணத்துவமும், அனுபவமும் உள்ளோர் நியமிக்கப்படுவர். ‘அனைத்து துறைகளையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இத்திட்டத்தை அரசு செயல்படுத்தினாலும், அரசு ஊழியர்களுக்கு உள்ள உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.