இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! ஸ்தம்பிதமடைந்த வடமாகாணம்
வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வரும் ஆசிரியர்களின் வருகை மிகக்குறைவாக காணப்பட்டுள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்படுவதோடு, பொதுமக்களின் இயல்புநிலைபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ் நகரம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் இன்மையால் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ் உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்து வாய்களில் கறுப்புத்துணிகளை கட்டி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.