சந்தை ஏன் இவ்வளவு உயர்ந்து நிற்கிறது?
சந்தை உச்சத்தில் நிற்கிறது. தொடர்ந்து, ‘நிப்டி’ 10 ஆயிரம் புள்ளிகளை தொடுமா என்ற ஆர்வத்தில், முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.
வரிசையாக வெளிவரும் நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகளை, சந்தை, கூர்ந்து எடை போடுகிறது. சந்தையில் அதிகம் வீற்றிருக்கும் சிறு முதலீட்டாளர்கள், அடுத்து எந்த பங்குகளை வாங்கலாம் என்ற ஆர்வத்தில், தினமும் சந்தையை நோக்கி படையெடுக்கின்றனர்.நிதி ஆலோசகர்கள் மற்றும் நிதி மேலாளர்கள், இதுவரை அடைந்த அபரிமிதமான லாபங்கள் நிலைக்குமா என, சந்தேகத்தில் வாழ்கின்றனர். இருந்தும், வேறு வழியின்றி, தொடர்ந்து பங்குகளை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தின வர்த்தகர்களோ, இது எதுவும் தங்களை பாதிக்காதது போல, சந்தையை மொய்க்கின்றனர்.இந்த சந்தைச் சூழல், பொதுவாக, காளை சந்தைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். அத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியின் உச்சத்தை சார்ந்து இருக்கும். சந்தை தொடர்ந்து, புதிய உச்சங்களை ஏற்படுத்திய வண்ணம் நகரும்.தற்போதைய பொருளாதார சூழல் ஒன்றும், அப்படி உச்சத்தில் இல்லை என்பதை, நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம்.• இந்த சூழலில், சந்தை ஏன் இவ்வளவு உயர்ந்து நிற்கிறது?• பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய, சந்தையின் உற்சாகம் நிலைக்குமா? • நிதி சிக்கலில் இருக்கும் பெரு நிறுவனங்கள், தங்கள் அடிப்படை நிதி நிலையை, எவ்வளவு விரைவில் மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்?• வங்கிகளின் பொருளாதார சிக்கல்கள் தீருமா அல்லது கடன் பெற்ற நிறுவனங்களின் நிர்வாகம், தங்கள் நிறுவனங்களின் மேலாண்மை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் ஏற்படுமா?• வரி சட்டங்களில் ஏற்பட்ட சமீபகால மாற்றங்கள், அரசின் வருவாயை அதிகரிக்குமா?• அரசின் நிதி பற்றாக்குறைகள், நிதி அறிக்கையில் சொன்ன அளவில் கட்டுப்படுத்தப்படுமா?• பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகம் பிடிக்குமா?இப்படி, சந்தையின் ஆர்வலர்கள் மனதில் பல கேள்விகள், சந்தேகங்கள்...ஆனால், இவை அனைத்தையும் புறந்தள்ளி சந்தை முன்னேற துடிக்கிறது.சந்தையின் தற்போதைய மனநிலை என்ன என்று, இப்போது புரிந்து கொள்வோம்.சந்தை, பொருளாதாரத்தின் சிக்கல்களையும், சவால்களையும் நன்கு புரிந்து வைத்துள்ளது. சந்தை, தன் எதிர்பார்ப்புகளை எந்தளவு வளர்த்துக் கொள்ளலாம் என, ஆழ்ந்த புரிதலுடனேயே இயங்குகிறது. அதிக நம்பிக்கை வைத்துள்ள நிறுவனங்கள், தங்கள் காலாண்டு கணக்கில் எதிர்பார்ப்புகளை மீறினால், சந்தை அதை பெரிதும் வரவேற்கிறது. அதே சமயம், எதிர்பார்ப்புகள் எட்டப்படாவிட்டால், அந்த பங்கின் மதிப்பு குறைகிறது.இந்த காலாண்டில், பல முக்கிய நிறுவனங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவோ, மிஞ்சவோ கூடும். இதை, சந்தை நன்கு உணர்ந்து இருக்கிறது. அதனால் தான், சந்தையில் சிறப்பாக இயங்கும் நிறுவனங்களின் மதிப்பு, சற்று உயர்ந்தே நிலைக்கிறது. சந்தையின் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத பங்குகள், சற்று மந்தமாகவே உள்ளன. எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும் போது, அதை நிறுவனங்கள் மிஞ்சுவது சாத்தியமாகிறது.ஆக, சந்தை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, நிறைவு செய்யும் விதமே, அதன் வளர்ச்சிக்கு வித்திடும் சூழலாக அமைகிறது. மென்பொருள் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளின் பங்குகள், குறைந்த எதிர்பார்ப்புகளை எளிதில் மிஞ்சும் சூழல் ஏற்பட்டால், அதுவே சந்தை மேலும் உயர வித்திடும். வரும் வாரங்களில், காலாண்டு முடிவுகள் சந்தையின் திசையை நிர்ணயிக்கும் வண்ணம் அமைவது உறுதி.