யாழில் அமைதி நிலவும் போது உயிர் போய்விட்டது! யாழ்.மேல் நீதிபதி வருத்தம்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் அமைதி நிலவும் போது உயிர் போய்விட்டது! யாழ்.மேல் நீதிபதி வருத்தம்

வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் தனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் யாழ்பாணத்தில் அமைதி நிலவும் போது போயுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்  தெரிவித்துள்ளார்.
 
நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் மெய் பாதுகாவலர் உயிரிழந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
“ஆயுத போராட்ட காலத்தில் வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலம் தொடக்கம் எனது மெய் பாதுகாவலராக இருந்தவர். நான் இடமாற்றம் செய்து செல்லும் இடமெங்கும் எனது மெய்பாதுகாவலராக இருந்தவர். 
 
அவர் சிலாபத்தை சேர்ந்தவர் அவருக்கு ஒரு பெண் பிள்ளையும் ஆண் பிள்ளையும் உண்டு. குறித்த உத்தியோகஸ்தர் என்னுடைய உயிரை பாதுகாப்பதற்காக துப்பாக்கிதாரியுடன் சண்டையிட்டு துப்பாக்கி பிரயோகத்தில் இறந்துள்ளார்.
 
மற்றைய மெய் பாதுகாவலரும் என்னை காப்பற்றுவதற்காக போராடி அவரும் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த மெய் பாதுகாவலர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். 
 
வவுனியாவில் அதி உச்ச அச்சுறுத்தல்கள் ஆபத்துக்கள் இருந்த கால கட்டத்தில் எனக்கு அருகில் நின்று அனைத்து பாதுகாப்புக்களையும் தந்தவர் அக்கால கட்டத்தில் அவர் உயிர் போகவில்லை.
 
யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் , யாழ்ப்பணத்தில் அனைத்து குற்றங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளபட்டு அவர் உயிரிழந்தது வருத்தத்திற்கு உரியது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை